×

வழக்குப் பதிவு செய்வதை தவிர்க்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 சப்-இன்ஸ்பெக்டர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் அசோக்(32). இவரது உறவினர் கிருஷ்ணவேணி. இவர், அண்ணாமலையார் கோயில் அருகே, பக்தர்கள் பொருட்கள் பாதுகாப்பிடம் நடத்தி வருகிறார். இங்கு கடந்த மாதம் 25ம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த பக்தர் ஒருவரின், லேப்டாப் வைத்திருந்த ‘லக்கேஜ் பேக்’ காணாமல் போனது. இதையடுத்து திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீசில் அவர் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பொருட்கள் பாதுகாப்பிடத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, வேறொரு நபர் அந்த ‘லக்கேஜ் பேக்’கை பெறுவது பதிவாகியிருந்தது.

தொடர்ந்து எஸ்ஐகள், திட்டமிட்டு வேறோருவருக்கு ‘லக்கேஜ் பேக்’ கை மாற்றி கொடுத்து அனுப்பியதாக உங்கள் மீது வழக்குப் பதிவு செய்வோம் என கூறி இரண்டு நாட்கள் இருவரையும் காவல் நிலையம் வரவழைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள நபரின் உருவம் தெளிவாக தெரிவதால், அவர் யாரென கண்டுபிடித்து விசாரிக்குமாறு அசோக் கேட்டாராம். ஆனால், அதை ஏற்க மறுத்த சப்-இன்ஸ்பெக்டர்கள் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.25 ஆயிரம் கேட்டார்களாம். அதன்படி, கடந்த மாதம் 27ம் தேதி ரூ.15 ஆயிரத்தை, அசோக் கொடுத்தார். மேலும், ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டவே, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஏற்பாட்டின்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை, சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், அன்பழகன் ஆகியோரிடம் நேற்று மதியம் அசோக் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Tags : Sub-Inspector , Case registered, Rs 5 thousand, bribe, 2 Sub-Inspector, arrested
× RELATED ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது