×

திருமங்கலத்தில் பிறந்த 32வது நாளில் பயங்கரம்: கள்ளிப்பால் கொடுத்து 2வது பெண் சிசு கொலை: தாய், தந்தை, தாத்தா கைது

திருமங்கலம்: மதுரை மாவட்டம், செக்கானூரணியை அடுத்துள்ள புல்லநேரி கிராமத்தை சேர்ந்தவர் வைரமுருகன் (28). மனைவி சவுமியா (24). வீட்டு வாசல் முன்பு பழக்கடை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டரை வயதில் ெபண் குழந்தை உள்ள நிலையில், சவுமியாவுக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி, செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2வதாக பெண் குழந்தை பிறந்தது. இதனால் தம்பதியர் விரக்தியடைந்தனர்.

கடந்த மார்ச் 2ம் தேதி இரவு, பெண் சிசு இறந்து விட்டதாக கூறி வீட்டு அருகே புதைத்துள்ளனர். இந்த தகவலை உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. இது, அக்கம்பக்கம் வசிப்பவர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தவே மீனாட்சிபட்டி விஏஓ மந்தக்காளையிடம் கூறினர். அவர் இதுபற்றி மதுரை அவசர காவல் உதவி எண்ணான 100க்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து செக்கானூரணி போலீசார் வந்து விசாரித்து, வைரமுருகன் வீட்டின் அருகில் இருந்த வேப்பமரத்திற்கு கீழ் புதைக்கப்பட்டிருந்த பெண் சிசு உடலை எடுத்து, டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர். இதில் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்றது தெரிய வந்தது.
இதையடுத்து வைரமுருகன், சவுமியா, வைரமுருகனின் தந்தை சிங்கத்தேவர் (65) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பிறந்த 32வது நாளில் பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : birth ,grandfather ,Thirumangalam ,infant , Kallipal, female infant, murdered, mother, father, grandfather, arrested
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா