×

சிவகாசியில் பரபரப்பு: ஏட்டு தூக்கிட்டு தற்கொலை

சிவகாசி: விருதுநகர் மாவட்டம்,  சிவகாசியை அடுத்த திருத்தங்கல் அருகே செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (49). இவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பாண்டீஸ்வரி (45). 2 மகள்கள், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பணிக்கு சென்ற அலெக்சாண்டர் இரவில் வீடு திரும்பினார். மனைவி, மகள்களுடன் ஒரு அறையில் படுத்து தூங்கினார். நேற்று காலை மனைவி கண் விழித்து பார்த்தபோது, அலெக்சாண்டர் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதை கண்டு பாண்டீஸ்வரியும், மகள்களும் கதறி அழுதனர்.

இதுதொடர்பாக திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குடும்பப் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது பணிச்சுமை காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர். தொடரும் அவலம்: நான்கு நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் மதுரை மேலூரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் யோகேஸ்வரனும், நேற்று முன்தினம் சிவகங்கை இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை மையத்தில் காவலர் சங்கர்சிங்கும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர். மதுராந்தகத்தை சேர்ந்த ஏட்டு சேகர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சிமலைமைய சேர்ந்த போலீஸ்காரர் சரவணனும் தற்கொலை செய்து கொண்டார். தொடரும் தற்கொலை சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்பிக்கு எழுதிய கடிதம் சிக்கியது
ஏட்டு அலெக்சாண்டர் வீட்டில் போலீசார் சோதனை செய்த போது ஒரு கடிதம் சிக்கியது. அது  நேற்றைய தேதியில் விருதுநகர் மாவட்ட எஸ்பிக்கு, அலெக்சாண்டர் எழுதிய கடிதம். அதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எனது தாயை, மதுரை தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து கவனித்து வந்தேன். இதனால் 31.5.2019 காலை 7 மணிக்கு ஆஜர் அணிவகுப்புக்கு வர இயலவில்லை.  26 ஆண்டாக எந்த தண்டனையுமின்றி பணி புரிந்து வந்தேன். அதனால் இந்த குற்றச்சாட்டிலிருந்து என்னுடைய இந்த விளக்கத்தினை கருணையோடு பரிசீலிக்க வேண்டுகிறேன். இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என எழுதியிருந்தார். ஆனால் அதை அனுப்பாமலே தற்கொலை செய்துவிட்டார்.

Tags : Sivakasi ,suicide ,head constable , Sivakasi, head constable, thrown, suicide
× RELATED சென்னை மதுரவாயல் அருகே தாக்குதலில்...