சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ, விஏஓ தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குரூப் 2 ஏ தேர்வில் இடைத்தரகருக்கு 11 லட்சம் லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்று சாந்தோம் பதிவுத்துறை அலுவலகத்தில் உதவியாளராக உள்ள சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அனிதாவும், 12 லட்சம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்று பட்டுக்கோட்டையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக உள்ள தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வெங்கடேசனும் சி.பி.சி.ஐ.டி போலீசாரால்கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி 2 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.