×

போடப்பட்ட மறுநாளே பெயர்ந்து வரும் தார்சாலை; நேற்று போட்டதை இன்று தொட்டால் கையில்தான் வரும்: நெடுஞ்சாலைதுறை அலட்சிய பதிலால் மக்கள் அதிர்ச்சி

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே குளமங்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை மறுநாளே கையோடு பெயர்ந்து வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, நேற்று அமைத்த சாலையை இன்று தொட்டால் கையிலதான் வரும் என  நெடுஞ்சாலைத்துறை அலட்சியமாக பதில் அளித்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குளமங்கலம் வடக்கு ஊராட்சியில் நெடுஞ்சாலை துறையின் தனி பழுதுபார்க்கும் திட்டத்தின்கீழ் ஒன்றரை கிலோ மீட்டர் வரையிலான சாலை ரூபாய் 22.50 லட்சத்திற்கு புதிதாக சீரமைக்கப்பட்டு வருகிறது.

நேற்று அந்த சாலை பணிகள் முடிந்த நிலையில்  ஒரே நாளில் அந்த சாலை  பெயர்ந்து சேதமடைந்து காணப்பட்டதால்  கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாலையை கையால் தொட்டுப் பார்த்தபோது, அது கையோடு பெயர்ந்து வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகளிடம் கிராம மக்கள் கேட்டபோது அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. எனவே உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தற்போது அமைக்கப்பட்ட சாலைக்கு பதிலாக மீண்டும் தரமான சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், நேற்று அமைத்த சாலையை இன்று பெயர்த்தால் பெயர்ந்து  தான் வரும். தற்போது அங்கு அமைக்கப்படும் சாலை மூன்று வருட உத்தரவாதத்தின் அடிப்படையில் தான் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் அந்தத் தரத்தில் தான் இருக்கும். ஒப்பந்தத்தில் உள்ளபடி இல்லாமல் குறைந்த தடிமனில் சாலை அமைக்கப்பட்டது தெரிய வந்தால் உடனடியாக அதை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர்.

Tags : match ,dismantling ,highway department , Darsalai, Highway Department, people shock
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல்...