சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தை லாபகரமாக இயக்கும் பொருட்டு முதல் கட்டமாக விழுப்புரம் கோட்டத்தில் உள்ள அரசு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து கழகங்களை லாபகரமாக இயக்கும் புதிய முயற்சிகளை தற்போது தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. இதன் முதல்கட்ட முயற்சியாக விழுப்புரம் கோட்டம் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அல்ட்ரா டீலக்ஸ் என்று அழைக்கப்படும் 2 + 2 இருக்கைகள் கொண்ட பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், அதேபோல 2 + 3 இருக்கைகள் கொண்ட டீலக்ஸ் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 15 ரூபாயில் இருந்து 10 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் விழுப்புரம் கோட்ட பேருந்துகளில் இம்முறை செயல்பாட்டிற்கு வருகிறது.
அரசு தரப்பில் இருந்து புதிய பேருந்துகள் அதிகளவில் வழங்கப்பட்ட சூழலிலும் போக்குவரத்து கழகங்கள் லாபகரமாக இயங்கவில்லை. இதற்கான காரணத்தை அறியும் போது தான் கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் முதல்கட்ட முயற்சியாக விழுப்புரம் கோட்டத்தில் செயல்பாட்டில் உள்ள குறைந்த தூரம் செல்லும் சொகுசு பேருந்துகளில் கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி விழுப்புரத்தில் சுமார் 700 பேருந்துகளில் இக்கட்டணம் அமலுக்கு வருகிறது. விழுப்புரத்தை கோட்டத்தை தொடர்ந்து பிற கோட்டங்களிலும் இந்த கட்டண குறைப்பு வரும் பட்சத்தில் ஒட்டுமொத்த போக்குவரத்து கழகங்களும் லாபகரமாக இயங்குவதில் மாற்றுக்கருத்து இல்லை.