×

துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் கத்தியைக்காட்டி கடும் ரகளை அதிமுக பெண் நிர்வாகி கைது

சென்னை: சாவு வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்றபோது கத்தியுடன் தகராறு செய்து இளம்பெண்ணை தாக்கிய விவகாரத்தில் அதிமுக பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையை சேர்ந்தவர் சாந்தலட்சுமி (42). ரவுடி தோட்டம் சேகரின் தங்கை. இவரது மாமியார் சொக்காம்மாள் (86) என்பவர் கடந்த 26ம் தேதி இறந்துவிட்டார். இவரது இறப்புக்கு ரவுடி தோட்டம் சேகரின் மனைவி மாலா, மகன் அழகுராஜா, பாலாஜி, மகளும் திருவல்லிக்கேணி அதிமுக பகுதி இணை செயலாளராக உள்ள மலர்கொடி (45) ஆகியோரும் சென்றுள்ளனர்.

அப்போது சாந்தலட்சுமி, ‘‘20 ஆண்டாக படுத்த படுக்கையாக இருந்தபோது பார்க்க வராமல் இப்போது ஏன் வந்தீர்கள்?’’ என கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், தோட்டம் சேகரின் மனைவி, மகன், மகள் ஆகியோர் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதன் பிறகு மாலை இவர்கள் அனைவரும் சாந்தலட்சுமியின் வீட்டிற்கு கத்தியுடன் சென்று தகராறு செய்து அங்கு இருந்த எல்இடி டிவி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்துவிட்டு சாந்தலட்சுமியின் மகள் சுபாஷினியை தாக்கியுள்ளனர். பின்னர், ‘‘சுடுகாட்டுக்கு வாங்க பாத்துக்கலாம்’’ என்று கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சாந்தலட்சுமி மற்றும் அவரது மகள் சுபாஷினி ஆகியோர் ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் படி தோட்டம் சேகரின் மனைவி மாலா, மகன் அழகுராஜா, பாலாஜி, மகள் மலர்கொடி மீது ஐபிசி 294 (பி), 307, 323, 324, 427, 506 (ii) மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அதிமுக திருவல்லிக்கேணி பகுதி இணை செயலாளரும், தோட்டம் சேகரின் மகளுமான மலர்கொடியை போலீசார் கைது செய்தனர்.


Tags : Woman administrator ,throwing knives ,place ,AIADMK , Arrested , knife blades, heavy stones, AIADMK executive
× RELATED 3வது இடத்துக்கு சீமானுடன்தான் போட்டி...