×

டெல்லியில் நடைபெற்ற வன்முறை ஒரு தலைப்பட்சமானது, நன்கு திட்டமிடப்பட்டவை: மாநில சிறுபான்மையினர் ஆணையம் அறிக்கை

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறை ஒரு தலைப்பட்சமானது, நன்கு திட்டமிடப்பட்டவை என்று மாநில சிறுபான்மையினர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும், அதே இடத்தில் சட்டத்திற்கு ஆதரவாக போராட  நடத்த வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த மோதல் கலவரமாக வெடித்த நிலையில், வன்முறை சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 1427 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் ஜாபருல் இஸ்லாம் கான் அடங்கிய தூதுக்குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வடகிழக்கு டெல்லியில் வெடித்த வன்முறை ஒரு தலைப்பட்சமானது, நன்கு திட்டமிடப்பட்டவை.

மேலும் கடைகள் மற்றும் வீடுகளுக்கு அதிகபட்ச சேதம் விளைவிக்கும் வகையில் உள்ளூர் மக்களிடமிருந்து ஆதரவை பெற்று நடத்தப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக ஏற்பட்ட சேதத்தின் அளவைக் கருத்தில் கொண்டு டெல்லி அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதாக இல்லை. நாங்கள் சென்ற எல்லா இடங்களிலும் முஸ்லீம் வீடுகள், கடைகள் மற்றும் பட்டறைகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 24, 25 தேதிகளில் தப்பியோடிய பின்னர் மக்கள் சேதமடைந்த வீடுகளுக்கு முதன்முறையாக வருகை தருவதை நாங்கள் கண்டோம்.

ஆனால் வீடுகள் மற்றும் கடைகள் மோசமாக சேதமடைந்து குப்பைகளாக கிடந்ததால், அவர்கள் எப்படி அங்கு வாழ முடியும். முஸ்லீம்களுக்கு சொந்தமான ஒரு பயண நிறுவனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஷோரூம் போன்ற கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்துக்கு சொந்தமான கடைகளுக்கு எந்த சேதாரமும் இல்லை. பிப்ரவரி 23ம் தேதியன்று, பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் அச்சுறுத்தல் மற்றும் இறுதி எச்சரிக்கைக்கு பின்னரே வன்முறை தொடங்கியுள்ளது, என கூறப்பட்டுள்ளது.

Tags : Delhi ,minorities panel , டெல்லியில் நடைபெற்ற வன்முறை ஒரு தலைப்பட்சமானது, நன்கு திட்டமிடப்பட்டவை: மாநில சிறுபான்மையினர் ஆணையம் அறிக்கை
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு