சென்னை: சிவகாசியில் வார இதழ் பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி-சாத்தூர் MLA ராஜவர்மன் மோதல் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் எனும் ஆணவத்தில் அராஜகமாகக் கொக்கரிக்கும் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அமைதி காப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், இதுகுறித்து கண்டன அறிக்கை ஒன்றையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில், வன்முறையும், கடுஞ்சொற்களையும் அரசியல் வழிமுறையாகக் கொண்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுகளும் செயல்பாடுகளும் பாரம்பரியமாக நல்லிணக்கம் கொண்ட தமிழகத்தில் மத வன்முறைகளையும், கலவரங்களையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. அதன் கொடூர அடையாளமாக, விருதுநகர் மாவட்ட அதிமுக அரசியலில் அமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் நடக்கும் மோதல் போக்கு குறித்த செய்தியினை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் கார்த்தி, சிவகாசியில் கடுமையான தாக்குலுக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அரசியலைமப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில், நடைபெற்றுள்ள இந்த கொலைவெறித் தாக்குதலுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், வழக்கமாக நடவடிக்கை எடுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, பிறகு குளிர்பதனப் பெட்டியில் அடைத்து வைக்கும் தந்திரத்தை இந்த நிகழ்விலாவது கைவிட வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வலியுறுத்துகிறேன்.
எப்போது யாரைப்பற்றி பேசினாலும், அடிப்பேன், உதைப்பேன், நாக்கை அறுப்பேன், தூக்கிப்போட்டு மிதிப்பேன் என்று, அமைச்சராக இருப்பதாலேயே ஆணவத்தினால், அராஜகமாகக் கொக்கரித்து வரும் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அமைதி காப்பது ஏன்?. இதற்கு, இந்த முற்றிப்போன நிலையிலாவது, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் கார்த்திக்கு உரிய தரமான சிகிச்சையும் பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கேட்டுக்கொள்கிறேன், என கூறியுள்ளார்.