×

மகாமக குளத்தில் 8ம் தேதி மகா ஆரத்தி பெருவிழா: காசியிலிருந்து ஆராதனை பொருட்கள் வருகை

கும்பகோணம்: கும்பகோணத்தில் அகில பாரதிய சன்னியாசி சங்கம் மற்றும் தென்பாரத கும்பமேளா மகாமகம் அறக்கட்டளை சார்பில் மாசிமகம் மகா ஆரத்தி பெருவிழா வரும் 8ம் தேதி நடக்கிறது. கும்பகோணத்தில் வரும் 8ம் தேதி மாசி மகத்தன்று அகில பாரதிய சன்னியாசி சங்கம் மற்றும் தென்பாரத கும்பமேளா மகாமகம் அறக்கட்டளை சார்பில் நீர்நிலைகளை பாதுகாத்தல், பராமரித்தல், நன்றி தெரிவித்தல் தொடர்பான சொற்பொழிவு, கலந்துரையாடல், சத்சங்கம் ஆகியவை காசிராமன் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் சன்னியாசி சங்க தலைவர் பேரூர் ஆதீனம் அதிபர் சாந்தலிங்க மருதாச்சால அடிகள் தலைமை வகிக்கிறார். துணைத்தலைவர் ராமானந்தா சுவாமி முன்னிலை வகிக்கிறார். மாலை 5 மணிக்கு சிவவாத்திய இசைக்கருவிகள், மங்கள வாத்தியம் முழங்க மகாமக குளத்தை தீர்த்தவலம் வரும் திருச்சுற்று நிகழ்ச்சி நடக்கிறது.

மாலை 6 மணிக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள், துறவியர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று ஆரத்தி வழிபாடு செய்யவுள்ளனர். அப்போது குளத்தின் நான்கு கரைகளிலும் திரளானோர் அகல் தீபமேற்றி வழிபடுவர். கங்கையில் நடைபெறும் தீப மகாஆரத்தி போன்று மகாமக குளத்திலும் நடத்துவதற்காக அதற்குரிய பன்முங்கள் கொண்ட வெள்ளியிலான ரூ.2 லட்சம் மதிப்புள்ள தீப, தூப, ஆராதனை பொருட்கள் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் காசி முகாமிலிருந்து கும்பகோணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சங்க அறங்காவலர் யோகி சிவ பிரம்மானந்த சரஸ்வதி சுவாமி, தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை குழுவினரிடம் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பொருட்களை ஒப்படைத்தார். அகில பாரதிய சன்னியாசிகள் சங்க துணைத்தலைவர் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் சுவாமி, ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதானந்த ஆனந்தா, தஞ்சை மண்டல பிரதிநிதி கோரக்கர் சுவாமி, தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் சத்தியநாராயணன், பொருளாளர் வேதம் முரளி பங்கேற்றனர்.

6 அடி தண்ணீரை 3 அடியாக குறைக்கும் பணி மும்முரம்

கும்பகோணம் மகாமக குளம் 6 ஏக்கர் பரப்பளவில் 21 தீர்த்த கிணறு, குளத்துடன் சேர்த்து 22 தீர்த்த கிணறுகளும், குளத்தை சுற்றிலும் 16 சோடச லிங்கங்கள் உள்ளன. இந்த குளத்தில் ஆண்டுதோறும் வரும் மாசி மகமும், 12 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மாசி மகாமகமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது குளத்தை சுற்றிலும் உள்ள வணிக நிறுவனங்கள் ராட்ஷத மோட்டார் உதவியுடன் தண்ணீர் உறிஞ்சி எடுத்தது. அதனால் குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டது. இதனால் மகாமக குளத்தில் உடனடியாக தண்ணீர் நிரப்ப வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அரசலாற்றில் ரூ.20 லட்சம் மதிப்பில் கடந்தாண்டு ராட்ஷத மின்மோட்டார் அமைத்து மகாமக குளத்தில் தண்ணீர் நிரந்தரமாக நிறுத்துவதற்காக முடிவு செய்யப்பட்டது. அதன்படி குளத்தில் தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது 6 அடி அளவில் மகாம குளத்தில் தண்ணீர் உள்ளது.

வரும் 8ம் தேதி தீர்த்தவாரி நடைபெறும்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள், குளத்தில் புனித நீராடும்போது அதிக அளவி் உள்ள தண்ணீரில் யாரேனும் மூழ்கும் ஆபத்து உள்ளது. எனவே பக்தர்களின் நலனை கருதி கோயில் நிர்வாகம் கடந்த 2 நாட்களாக, மகாமக குளத்தில் இருந்து தண்ணீரை குளத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள வடிவாய்க்கால் வழியாக மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறது.இதுகுறித்து கோயில் அலுவலர் கூறுகையில், வரும் 8ம் தேதி மகாமக குளத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது. அப்போது குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவர். அப்போது குளத்தில் அதிகளவில் தண்ணீர் இருந்தால் ஏதேனும் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு 6 அடி உயரத்தில் உள்ள தண்ணீரை தற்போது இறைத்து கொண்டிருக்கிறோம். குளத்தில் 3 அடி அளவுக்கு தண்ணீர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Tags : Maha Arathi Festival ,Kasi , Mahamagga Pond, Great Arathi Festival, Kasi and worship items
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...