சேலம்: சேலம் குரங்குச்சாவடி நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோபி. கூலி தொழிலாளி. இவரது மனைவி நீலா. நிறைமாத கர்ப்பிணியான இவரை, கடந்த ஜனவரி 26ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 28ம் தேதி நீலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குடும்பத்தின் வறுமை காரணமாக பெற்ற குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தாய் சென்று விட்டார். குழந்தையின் எடையளவு மிக குறைவாக இருந்ததால் மருத்துவமனையில் உள்ள வாமர் கருவியில் வைத்து பாராமரிக்கப்பட்டு வந்தது. பிறந்து 34 நாட்கள் முடிந்த நிலையில் பெற்றோர் வாங்க வராததால் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் நேற்று முன்தினம் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தர்மபுரியில் உள்ள காப்பகத்துக்கு குழந்தை அனுப்பப்பட்டது.