உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.ஜி.நகர் எஸ்.வி.புரத்தை சேர்ந்தவர் மணிபிரபு (45). இவர் எலையமுத்தூரில் உள்ள கிழுவன்காட்டூர் துணை மின் நிலையத்தில், கடந்த 3 ஆண்டுகளாக இன்ஜினீயராக பணியாற்றி வந்தார். இரவு பணியை முடித்துவிட்டு, நேற்று அதிகாலை வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது, கொழுமத்தை சேர்ந்த வயர்மேன் கண்ணன் (45), பகல் பணிக்காக துணை மின் நிலையத்துக்கு வந்தார். அவர் மணிபிரபுவிடம், ‘எனக்கு ஏன் இரவு பணி போடுவதில்லை’ என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு மணிபிரபு, ‘உயர் அதிகாரிகள்தான் ஷிப்ட் போடுகிறார்கள். எனக்கு தெரியாது’ என கூறிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றார். ஆத்திரமடைந்த கண்ணன், அங்கு கிடந்த கட்டையை எடுத்து மணிபிரபுவின் பின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மணிபிரபு மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த துணை மின் நிலைய ஊழியர்கள், மணிபிரபுவை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மணிபிரபு இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொமரலிங்கம் போலீசார் கொலை வழக்குப்பதிந்து, கண்ணனை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இன்ஜினீயர் மணிபிரபுவுக்கு, சுபாஷினி என்ற மனைவியும், மதுவர்ணிதா (7), தபு வைஷ்ணவி (4) இரு மகள்களும் உள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து, துணை மின்நிலைய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கு திரண்டனர்.