×

அளவுக்கு அதிகமாக மது அருந்திய மாஜி போலீஸ்காரர் பலி

சென்னை: அளவுக்கு அதிகமாக மது அருந்திய மாஜி போலீஸ்காரர் நாக்கு வறண்டு பலியானார். அமைந்தகரை ஆபீசர் காலனி 3வது தெரு அருகில் உள்ள மைதானத்தில் நேற்று ஒருவர் மயங்கி கிடந்தார். அவ்வழியே சென்ற சிலர், அவரை எழுப்ப முயன்றனர். ஆனால், அவர் எழுந்திருக்கவில்லை. உடனே இதுபற்றி அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த நபரை எழுப்ப முயன்றனர். அப்போது, அவர் இறந்தது தெரிந்தது.

இதையடுத்து சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்து கிடந்தது அமைந்தகரை மேத்தா நகரை சேர்ந்த தியாகராஜன் (57) என்பதும், இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த 1987ம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்த இவர், 1999ம் ஆண்டு வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றியுள்ளார். பணியில் மெத்தனமாக இருந்ததால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு பணிக்கு செல்லாமல் குடிக்கு அடிமையானதும், சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்திய தியாகராஜன், நாக்கு வறண்டு இறந்தது தெரியவந்தது. இதுபற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Magi policeman , Alcoholic, Magi policeman, killed
× RELATED அளவுக்கு அதிகமாக மது அருந்திய மாஜி போலீஸ்காரர் பலி