புதுடெல்லி: டெல்லி வன்முறையின்போது போலீஸ்காரரின் நெற்றியின் மீது துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஷாரூக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் கடந்த வாரம் நடந்த போராட்டத்தின்போது, வன்முறை வெடித்தது. வீடுகள், கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
வன்முறை நடந்தபோது, ஜப்ராபாத் பகுதியில் ஒரு நபர் போலீஸ்காரரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார்.
சமூக வலைத்தளங்களிலும் இந்த புகைப்படங்கள் பரவின. அந்த நபரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில், தலைமறைவாக இருந்த அந்த நபர் பெயர் ஷாரூக் என்பதும், அவர் உத்தரப் பிரதேசத்தில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்திற்கு சென்று அங்கு பதுங்கியிருந்த ஷாரூக்கை கைது செய்து நேற்று டெல்லி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.