×

போலீசில் அளித்த பலாத்கார புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டல் கணவன், மனைவியை கடத்தி நிர்வாணமாக்கி சித்ரவதை: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

அகமத்நகர்: மகாராஷ்டிரா மாநிலம் டோப்கானா போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 29 வயது பெண் ஒருவர் கடந்த 2016ம் தேதி சிலருக்கு எதிராக போலீசில் பலாத்கார புகார் அளித்திருந்தார். அந்த புகாரை வாபஸ் பெறுமாறு அவருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் 24ம் தேதியன்று அந்த பெண்ணும் அவரது கணவரும் வெளியே சென்று விட்டு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோவில் அவர்களுடன் பயணம் செய்த ஆசாமி ஒருவன் தன்னிடமிருந்த மயக்க மருந்து ஸ்பிரேயை எடுத்து கணவன், மனைவி முகத்தில் அடித்தான். இதனால் இருவரும் மயங்கிப் போனார்கள். இதையடுத்து, அந்த தம்பதியர் ஒரு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைபிடிக்கப்பட்டனர். அந்த அறையில் மொத்தம் 5 பேர் இருந்தனர். போலீசில் அளித்த பலாத்கார புகாரை வாபஸ் பெறுமாறு தம்பதியரை அந்த 5 பேரும் மிரட்டினர். இந்த 5 பேரில் இருவருக்கு எதிராகத்தான் பலாத்கார புகார் அளிக்கப்பட்டிருந்தது.

தம்பதியரோ மிரட்டலுக்கு பணியவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல், தம்பதியரின் ஆடைகளை களைந்து அவர்களை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதை செய்தது. இறுதியாக அவர்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிய அந்த கும்பல் தீ வைக்கப் போவதாக மிரட்டியது. இந்த காட்சியை அந்த கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவன் வீடியோவில் பதிவு செய்தான். இந்த சம்பவம் கடந்த மாதம் 24ம் தேதி நடந்த போதிலும், நேற்று முன்தினம்தான் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

டோப்கானா போலீசார் தம்பதியரை நேற்று நேரில் சந்தித்து முறைப்படி புகாரை பெற்றுக் கொண்டனர். அதனடிப்படையில் 5 பேருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேடப்படும் குற்றவாளிகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன், அவனது 2 மைத்துனர்கள் மற்றும் 2 பேர் அடங்குவர் என்றும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அகமத்நகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சாகர் பாட்டீல் தெரிவித்தார்.

Tags : gang , Forced to withdraw, threaten, intimidate, gang of 5, police
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை