பானிபட்: மின்கம்பத்தில் ஏறி டிக்டாக் வீடியோ எடுக்க முயன்ற வாலிபர், 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியானார். அரியானா மாநிலம் தரம்கர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் விகாஸ். இவர் அப்பகுதிக்கு அருகே இருக்கும் மாத்லோதா ரயில் நிலையத்துக்கு நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை சென்றார். அப்போது நண்பர்கள் இடையே டிக்டாக் செயலிக்காக வீடியோ எடுப்பது தொடர்பான யோசனை தோன்றியது.
இதில் விகாஸ் உடனடியாக அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறி டிக்டாக்கிற்காக வீடியோ எடுக்க தொடங்கினார். அப்போது மின்கம்பத்தின் மேலே இருந்த 25,000 வோல்ட் மின்கம்பியில் இருந்து, மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார். இதனை மின்கம்பத்தின் கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நண்பர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.