செங்கல்பட்டு: செங்கல்பட்டில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் நலம், மன நலம், அவசர சிகிச்சை பிரிவு, பொதுநல பிரிவு, சிறுநீரக துறை, இதயவியல் துறை, சிறுநீரகவியல் துறை, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவ துறை, குழந்தைகள் நலத்துறை, முடநீக்கியல் துறை, பொது அறுவை சிகிச்சை துறை, மயக்கவியல் துறை, தோல் நோய் மருத்துவம், பால்வினை நோய் பிரிவு, நுண்கதிர் வீச்சுத்துறை, நரம்பியல் துறை, 24 மணிநேர ஆய்வக கூடம் என அனைத்து பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.
1200 உள் நோயாளிகளும், நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகளுக்ம் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை- திருச்சி, சென்னை- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலைகள், சென்னை- பாண்டி கிழக்கு கடற்கரை சாலை என அனைத்து சாலைகளிலும் நடைபெறும் விபத்துக்களில் படுகாயம் அடைபவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மருத்துவமனையின் முதல் மாடியில் உள்ள பெண்களுக்கான உள்நோயாளிகள் பிரிவில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் வராண்டாவில் படுக்கைகள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
வராண்டா பகுதியில் ஜன்னல்கள் இல்லாமல் கொசு வலை மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து வரும் குளிர்ந்த காற்றால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.இதே போன்று அவசர சிகிச்சை மையம் அருகில் பார்வையாளர்கள் தங்குமிடம் ரத்த பரிசோதனை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள், மருத்துவமனை சாலையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள சிமென்ட் சாலைகள் பழுதடைந்துள்ளது. இருசக்கர வாகன நிறுத்தம் இல்லாததால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது.
இதனால் நெரிசல் ஏற்படுவதாலும் நோயாளிகள் அவதிப்படுவதுடன், அவசர சிகிச்சை வாகனங்கள் செல்வதற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. நோயாளிகளின் உடல்நலம் கருதி போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.