மன்னார்குடி: பருவநிலை மாற்றம் காரணமாக வடுவூர் சரணாலயத்துக்கு இந்தாண்டு 40 சதவீதம் பறவை வருகை குறைந்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூரில் 316 ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் இருந்தும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இனப்பெருக்கத்திற்காக 38 வகையான 2 லட்சம் பறவைகள் வந்து செல்கிறது. இவ்வாறு வரும் பறவைகள் ஏப்ரல் மாதம் முதல் தங்களின் நாடுகளுக்கு மீண்டும் திரும்பி செல்கிறது.
இந்நிலையில் வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் நடப்பாண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி மாவட்ட வன அலுவலர் டாக்டர் அறிவொளி, மன்னார்குடி வனச்சரகர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சில நாட்களுக்கு முன் துவங்கியது. திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனத்தின் வன உயிரியல் விஞ்ஞானி குமரகுரு தலைமையில் 38 மாணவ மாணவியர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
கணக்கெடுப்பின் முடிவில், தற்போது வடுவூர் ஏரியில் ஆயிரக்கணக்கில் பறவைகள் குவிந்திருந்தாலும் உலகளாவிய பருவநிலை மாற்றம் காரணமாக கடந்தாண்டை விட இந்தாண்டு வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வன உயிரியல் விஞ்ஞானி குமரகுரு கூறுகையில், மத்திய ஆசியா, ஐரோப்பா, வடக்கு ஆசியா, கஜகஸ்தான், ஆப்பிரிக்கா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நில பறவைகள், நீர் பறவைகள் என 2 வகைகளாக பிரிக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கணக்கெடுப்பின் போது 48 வகையான நீர் பறவைகள், 70வகையான நிலப்பறவைகள் என மொத்தம் மொத்தம் 118 வகைகளை சேர்ந்த 14 ஆயிரத்து 443 பறவைகள் மட்டுமே இந்தாண்டு வடுவூருக்கு வந்துள்ளது தெரிகிறது. இதில் 27 வகையான அயல் நாட்டு பறவைகள் வந்துள்ளது. குறிப்பாக புள்ளி மூக்கு வாத்து, ஊசி வாய் வாத்து, வெள்ளை அரிவாள் மூக்கன், குள்ளதார, பணங்கொட்டை சிறவி, அகல வால் சிறவி, நெடுங்கால் உள்ளான் என்கிற பவளக்கால் உள்ளான் உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் இந்தாண்டு வந்துள்ளது.
ஆனால் கடந்தாண்டு அதிகளவில் வந்த தட்டை வாயன், துடுப்பு வாயன், முக்குளிப்பான், மண் கொத்தி பறவை உள்ளிட்ட பல பறவைகள் இந் தாண்டு மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வந்துள்ளது. அதே சமயம் சென்ற ஆண்டு வந்த, வரித்தலை வாத்து, செங்கால் நாரை, பூ நாரை, கூழை கிடா போன்ற பறவைகளின் வரத்து இந்தாண்டு முற்றிலும் இல்லை. மேலும் வடுவூர் பறவைகள் சரணாலயத்திற்கு கடந்தாண்டு வந்த பறவை இனங்களில் 5 முதல் 8 சதவீத வரத்து இந்தாண்டு குறைந்துள்ளது.
அதே போல் இந்தாண்டு வந்துள்ள பறவைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் 35 முதல் 40 சதவீதம் வரை கடந்தாண்டை விட பறவைகளின் வரத்து குறைந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தியா உள்ளிட்ட உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாக இருக்கிறது என்றார்.