வால்பாறை: வால்பாறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து கிரேன் வாகனம் ஒன்று இன்று காலை பொள்ளாச்சி கிளம்பியது. காலை 7 மணியளவில் வால்பாறை மலைப்பாதையில் 15வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, கிரேன் வாகனம் எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்தது. இதை ஓட்டி சென்ற டிரைவர் காயமின்றி தப்பினார். கிரேன் வாகனம் நடுரோட்டில் ரோட்டை அடைத்து கிடந்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
கிரேன் வாகன டிரைவர் கொடுத்த தகவலின் பேரில், சம்பந்தப்பட்ட கிரேன் வாகனத்தின் உரிமையாளர் மற்றொரு கிரேன் வாகனத்தை வரவழைத்து, கவிழ்ந்து கிடந்த கிரேன் வாகனத்தை நிமிர்த்தி மீட்டார். இவ்விபத்தால் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து, 8 மணியளவில் சீரானது.