×

மாடுகளுக்கு காது வில்லை அணிவிக்கும் திட்டத்தில் குளறுபடி: ஆட்கள் பற்றாக்குறை எனக்கூறி கால்நடை மருத்துவர்கள் மழுப்பல்

தமிழகத்தில் மாடுகளுக்கு கடுக்கன் (காது வில்லை) அணிவிக்கும் திட்டத்தில் குழப்பம், குளறுபடி நிறைந்துள்ளது. இத்திட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு கால்நடைத்துறை மருத்துவர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாடுகளுக்கு தேசிய நோய் தடுப்பு திட்டத்தை (NADCP) தமிழகத்தில் எவ்வித முன்னேற்பாடின்றி செயல்படுத்த நினைப்பதால் பல்வேறு குழப்பம், குளறுபடி ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 4 மாத வயதுக்கு மேலுள்ள அனைத்து மாடுகளுக்கும் 12 இலக்க எண்களுடைய காது வில்லைகள் மாடுகளின் இடது காதில் பொருத்தப்பட்டு அடையாளமிட வேண்டும். இவ்வாறு அடையாளமிடப்பட்ட மாடுகளின் உரிமையாளர் ஆதார் எண், தொலைபேசி எண், முகவரி போன்றவற்றோடு கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள மாடுகளின் எண்ணிக்கை 1.20 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 15 சதவீத விழுக்காடு காது வில்லைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அவையும் முழுமையாக பொறுத்தப்படவோ, கணினியில் பதிவேற்றம் செய்யப்படவோ இல்லை. 50 விழுக்காட்டுக்கும் மேல் கால்நடை பராமரிப்புத்துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளது. உதவியாளர்கள் இல்லாத நிலையிலேயே ஒரு கால்நடை மருத்துவர் மட்டுமே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் அந்தந்த நிதியாண்டிலேயே காலதாமதமின்றி 100% கால்நடை மருத்துவர்களை வைத்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் கோமாரி நோய் தடுப்பூசி பணியாக ஒரு நாளைக்கு ஒரு குழுவால் 150 மாடுகளுக்கு தடுப்பூசி போட்டால் போதுமானது. இருப்பினும் ஆட்கள் பற்றாக்குறையால் சராசரியாக 250 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் இந்த முறை மத்திய அரசின் ஆணை என்கிற காரணத்தை காட்டி மாடுகளுக்கு காது வில்லைகள் பொறுத்துதல், அதற்குரிய தகவல்களை இணையவழி பதிவேற்றம் செய்தல், தடுப்பூசி போடுதல் பணிகளையும் செய்ய வேண்டும் என்பதோடு காதுவில்லைகள் போட்டுகொள்ள மறுக்கிறபோது எவ்வித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்கிற விளக்கமும் அளிக்கவில்லை.

இதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறியதாவது: கால்நடைத்துறையில் 50 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. தடுப்பூசி பணிகளுக்கே கால்நடை மருத்துவர்கள் பல்வேறு சிரமத்துக்கிடையே பணி செய்து வருகின்றனர். காதுவில்லை அணிவித்து அதில் அனைத்து விபரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். கிட்டத்தட்ட மாடுகளின் மொத்த ஜாதகத்தையும் பதிவு செய்ய வேண்டும். என்ன நிறம், என்ன வகை மாடு ஆணா, பெண்ணா, குட்டி ஈன்றதா என விடுபடாமல் பதிவு செய்ய வேண்டும். விழிப்புணர்வு இல்லாத கிராமப்புற மக்களிடையே மாடுகளுக்கு தடுப்பூசி போடவே அல்லாட வேண்டியுள்ளது. பால் கறக்கும் தன்மை குறைந்து விடும். கன்றுக்குட்டி வெளித்தள்ளி விடும் என போதிய விழிப்புணர்வு இன்றி மறுப்பு தெரிவிப்போர் ஏராளம் உள்ளனர்.

இந்த பதிவை கால்நடை மருத்துவர்கள் தங்கள் சொந்த ஏற்பாட்டிலேயே செய்ய வேண்டும். இதற்கு கணினி வசதி, ஆண்ட்ராய்ட் போன் வசதியை தாங்களே செய்து கொள்ள வேண்டும். அரசால் தரப்பட்ட டேப்லெட் பழுதடைந்து செயல்படாத நிலையில் உள்ளது. எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதியின்றி கால்நடை மருத்துவர்களை பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபடுத்தினால் மருத்துவம் யார் பார்ப்பது என தெரியவில்லை. இதற்கு முன் தேசிய வெக்கை நோய் ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டபோது அதற்காக மாநிலம், மாவட்டம் ஒன்றிய அளவில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு இந்தியாவில் வெக்கை நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரள மாநிலத்தில் இப்பணிக்கு தனியாக தடுப்பூசி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று தமிழகத்திலும் தனிப்பிரிவு அமைக்க வேண்டும்.

மேலும் மாடுகளுக்கு கடுக்கன் வில்லை அணிவிக்க சென்றால் இது எதற்காக, வங்கி கடன் தருவீர்களா. இன்சூரன்ஸ் போடுவீர்களா. இல்லை வேறு ஏதேனும் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பும் பொதுமக்களுக்கு உரிய பதில் அளிக்க முடியவில்லை. தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை 3.25 லட்சம் மாடுகள் இருக்கும்போது கடந்த 2 ஆண்டுகளில் 60 ஆயிரம் வில்லைகள் மட்டும் ஒதுக்கப்பட்டு, அதிலும் 25 ஆயிரம் மாடுகளுக்கு மட்டுமே வில்லைகள் போடப்பட்டுள்ளது. ஆனாலும் முழுமையாக விபரங்கள் பதிவேற்றப்படவில்லை. இதன் காரணமாக கால்நடை மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆட்கள் பற்றாக்குறையால் அவதியுறும் இந்நேரத்தில் சரியான திட்டமிடாமல் செயல்படுத்த முனைப்பு காட்டுகிற எந்த திட்டமும் குழப்பம், குளறுபடிகளை உண்டாக்கும் என்றார்.

Tags : veterinarians ,men , Scarcity , deaf ears, cows,veterinarians complaining of lack, men
× RELATED கால்நடை மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்