×

டெல்லி கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி முடங்கியது நாடாளுமன்றம்: அமித்ஷா உடனே பதவி விலக கோரிக்கை: கருப்பு கொடியுடன் காங்கிரஸ் கோஷம்

* பாஜ எம்பிக்களுடன் கடும் வாக்குவாதம் * நாள் முழுவதும் அலுவல் ஒத்திவைப்பு

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் 42 பேர் பலியான விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியினர், இரு அவையிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் கருப்பு கொடி காட்டிய எதிர்க்கட்சி எம்பிக்களை பாஜ உறுப்பினர்கள்  தள்ளி விட்டதால் மோதல் ஏற்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  ஜனவரி 31ம் தேதி கூடியது. கடந்த மாதம் 11ம் தேதியுடன் நிறைவடைந்தது. அந்த கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 2ம் கட்ட கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவை காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத் தொடரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவை தொடங்கியதும் கடந்த மாதம் 28ம் தேதி மரணம் அடைந்த பீகார் மாநிலம் வால்மீகி நகர் தொகுதி ஐக்கிய ஜனதா தளம் எம்பி பத்தியநாத் பிரசாத் மக்தோவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம் ஆத்மி உறுப்பினர் பகவந்த் மான் பதாகையை கையில் ஏந்தியபடி டெல்லி கலவர பிரச்னையை அவையில் எழுப்பினர். அப்போது இருதரப்பு உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் அவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியது. அப்போது அவையின் மையப்பகுதியில் கூடிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆளும் கட்சி எம்பிக்கள் இருந்த பகுதிக்குள் கருப்பு கொடியுடன் புகுந்தனர். அப்போது டெல்லி கலவரத்தை தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரி முழக்க மிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜ எம்பிக்கள், குறிப்பாக கடைசி பெஞ்சில் இருந்த பாஜ உறுப்பினர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களை நெருக்கித் தள்ளினர். தொடர்ந்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்பிகள் மாறி, மாறி தள்ளியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவை பிற்பகல் 3 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை: இதேபோல் மாநிலங்களவையும் நேற்று காலை கூடியபோது, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்  ஏ.வி.சுவாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து  அவைத்தலைவர் வெங்கையா நாயுடு 24 துறைகளை சேர்ந்த நிலைக்குழு பரிந்துரை  செய்த மானியக்கோரிக்கைகள் தொடர்பான குறிப்புகளை வாசித்தார்.

அப்போது பேசிய வெங்கையா நாயுடு, `‘தற்போதைய  பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி 96 சதவீத அமர்வுடன் சிறப்பாக  நடைபெற்றது. இதுபோல் 2வது அமர்வு சிறப்பாக நடைபெற வேண்டும். மேலும் டெல்லி  கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கட்டாயம்  விவாதிக்கப்படும். அதேநேரத்தில் முதலில் டெல்லியில் அமைதி திரும்ப  முன்னுரிமை அளிக்கப்படும். அங்கு இயல்பு நிலை திரும்பியதும் இது தொடர்பாக  விவாதிக்கப்படும்’’ என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல்  காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திமுக உறுப்பினர்கள் அவையில் எழுந்து  நின்று அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். டெல்லியில் மத்திய அரசு தனது  கடமையை செய்யத் தவறி விட்டதாக குற்றம்சாட்டினர். அப்போது பேசிய எதிர்க்கட்சி  தலைவர் குலாம்நபி ஆசாத், ‘`டெல்லியில் வன்முறை நடந்த 3 நாட்களாக மத்திய அரசு  தூங்கிவிட்டது’’ என குற்றம்சாட்டினார்.
அப்போது திரிணாமுல்  காங்கிரசார் தங்கள் கண்களில் கருப்பு துணிகளை கட்டியபடி `டெல்லி பற்றி  எரிகிறது’ என கோரசாக முழக்கமிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த  பேரவைத்தலைவர் வெங்கயா நாயுடு, கண்களில் கட்டியுள்ள துணிகளை அவிழ்க்குமாறும்  உத்தரவிட்டதுடன், `‘அவையில் கண்களில் துணி கட்ட அனுமதியில்லை’’ என்று  தெரிவித்தார். ஆனாலும் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவையை  பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார் வெங்கையா நாயுடு. பின்னர் அவை நாள்  முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Tags : resignation ,Amit Shah ,Congress ,opposition parties ,Delhi ,parliament , Delhi riots, Opposition parties , serial riots, , paralyzed , Parliament
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...