×

மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

சென்னை: திமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் சுமார் 13 ஆயிரத்து 500 பேர் கடந்த 2011ம் ஆண்டு பணியிலிருந்து தமிழக அரசால் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக மக்கள் நல பணியாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் உடனடியாக மாற்றுப்பணி வழங்குமாறு கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மாநில அரசின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து கடந்த 2014ல் செப்டம்பர் 23ம் தேதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தது.

இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுவை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி விசாரணையாக எடுத்து விசாரிப்பதாக அறிவித்திருந்தது. எனவே, வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் நலப் பணியாளராக பனியாற்றிய தன்ராஜ் என்பவர் தரப்பில் நேற்று ஆஜரான வழக்கறிஞர்கள் ஹர்ஷியா கோஷ் மற்றும் ராஜராஜன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் ஒரு கோரிக்கை வைத்தனர். அதில், மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரத்தில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு, இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மனு அடுத்த ஓரிரு நாளில் விசாரணைக்கு வருகிறது.

Tags : Supreme Court ,hearing , People's welfare, litigation, Supreme Court, hearing
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...