மதுரை: தாமிரபரணி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்கவும், ஆற்றங்கரை ஆக்கிரமிப்பை அகற்றவும் உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோரிடம் நெல்லை மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் தரப்பில் அரசு தரப்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் வழக்கறிஞரின் கையொப்பம், பெயர் உள்ளிட்டவை இல்லை. இதையடுத்து, அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் தாமிரபரணி ஆற்றை வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும்’’ என வேதனை தெரிவித்தனர். பின்னர், ‘‘நெல்லை மற்றும் தூத்துக்குடி கலெக்டர்கள் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.