×

மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு 5வது மாடியில் இருந்து குதித்து கணவன் தற்கொலை: தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, கள்ளத்தொடர்பு விவகாரத்தால் மனைவியை கழுத்து அறுத்து படுகொலை செய்து விட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது 5வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நார்சாம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல்(38). இவரது மனைவி நதியா(32). இவர்களுக்கு 9, 6 வயதுகளில் 2 குழந்தைகள் உள்ளனர். சக்திவேல் கேரளாவில் பொக்லைன் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த போது அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், கத்தியால் நதியாவின் நெஞ்சில்  குத்தினார். மேலும், அவரது கழுத்தை ஆட்டை  அறுப்பது போல் அறுத்து கொன்றார். பின்னர் அதே கத்தியால் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார், நடத்திய விசாரணையில்,  அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருடன், நதியாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததும், சக்திவேல் கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரமடைந்து, மனைவியை கத்தியால் கழுத்து அறுத்து கொன்றதும்,  தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

இதனிடையே, மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சக்திவேல் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு,  போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வாக்குமூலம் வாங்க போலீசார் தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில், கழிப்பிடம் சென்று வருவதாக போலீசாரிடம் கூறி விட்டு சென்ற சக்திவேல், மருத்துவமனையின் 5வது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து ெகாண்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : suicide ,floor , Wife, killed, 5th floor, husband, suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை