பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலகோபாலபுரத்தில் உள்ள பழைய நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகரில் மத்திய பகுதியில், குடியிருப்புகள் மிகுந்த இடத்தில் உள்ள பாலகோபாலபுரம் நகர்வழி நடுநிலை பள்ளி 1946ஆண்டு முதல் செயல்பட்டது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த இந்த பள்ளியில், ஆரம்பத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை, இப்பள்ளியில் படிக்க வைத்தனர். ஆனால், நாளடைவில் இப்பள்ளி முறையான பராமரிப்பு இல்லாமல் போனது. அடிப்படை வசதிகள் குறைந்ததால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை, இப்பள்ளியில் படிக்க வைக்க தயங்கினர். இதனால், நாளுக்கு நாள் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே போனது. மேலும், பள்ளி கட்டிடம் பழுதால், அங்கு படித்த மாணவர்கள் அருகே கட்டப்பட்ட மற்றொரு பள்ளி கட்டிடத்தில் மாற்றப்பட்டனர்.
தற்போது பழைய நகராட்சி பள்ளி வளாகத்தை பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டதால் பொழிவிழந்து. குப்பைகள் கொட்டும் இடமாக மாறியது. இங்கு அவ்வப்போது தீ வைக்கப்படுவதால், அப்பகுதியில் புகை சூழ்ந்து சுகாதார சீர்கேடு உண்டாகிறது. அதுமட்டுமின்றி அங்குள்ள மைதானத்திற்குள் அமர்ந்து மது அருந்துவது உள்ளிட்ட சமூகவிரோத செயல்களும் நடந்து வருகிறது. எனவே, பழைய நகராட்சி பள்ளி வளாகத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.