சேலம்: டெல்லியில் நடந்தது போல் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜ திட்டமிட்டுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் அச்சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்க, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் சேலம் கோட்டையில் இஸ்லாமிய பெண்கள், நேற்று 14வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன்காந்தி ஆகியோர் பேசினர். பின்னர் முத்தரசன் அளித்த பேட்டி: 2வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக, அனைத்து துறையிலும் தோல்வியடைந்துள்ளது. அதை மறைக்க வேறு பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை சட்டமாக்கும் வகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை உள்நோக்கத்தோடு கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். குஜராத்தில் ஏற்படுத்தியதை போல், டெல்லியில் கலவரத்தை ஏற்படுத்தி அங்கு 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். டெல்லியை போல் தமிழகத்திலும் கலவரத்தை உருவாக்க பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது.
பாஜ நடத்திய எதிர் போராட்டத்தில் பேசிய நபர்கள், வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார்கள். அவர்கள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அமைதியாக போராடுபவர்களை மிரட்டுகிறது. கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜ ஆளும் பீகாரில் கூட முழு ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி அரசு அஞ்சுகிறது. எடப்பாடி அரசு இனியாவது சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.