×

ஹெல்மெட் இல்லாமல் 20 கிமீ வேகமும் ஆபத்தே... தென்காசி ஜவஹர், தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர்

வாகன விபத்துக்களில் 2016ம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக உயிரிழப்பு ஏற்பட்ட மாநிலமாக தமிழகம் இருந்தது. இதையடுத்து, தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது அவர் நான் எலும்பு தொடர்பான சிகிச்சையளித்து வருகிறேன். அடிக்கடி விபத்தால் பாதிப்படைந்து பலர் வருகின்றனர். எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். அதற்கு நீதிமன்றம் 2020ம் ஆண்டுக்குள் விபத்தை பாதியாக குறைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

2018ம் ஆண்டில் மொத்தம் 63,920 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 12,216 வாகன ஓட்டிகள் உயிரிழந்தனர். இதையடுத்து அதிக அளவில் சாலை விபத்துக்களை குறைத்த மாநிலம் என தமிழகத்தை தேர்வு செய்து, மத்திய அரசு விருது வழங்கியது. தொடர்ந்து 2019ம் ஆண்டில் 57,228 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 10,525 ஆக உயிரிழப்பு குறைந்தது. சில இடங்களில் சாலை விபத்துக்களுக்கு சாலைகளில் அமைப்பும் ஒரு காரணமாக இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையுடன், சிறு கிராம சாலை அல்லது நகர சாலை சில இடங்களில் சேரும். அந்த இடங்களில் விபத்து நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அந்த இடங்களில் வேகத்தடை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சில சாலைகளில் அபாயகரமான திருப்பங்கள் இருக்கும். அந்த இடம் குறித்து முன்கூட்டியே வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அதற்கான விபரம் அடங்கிய பலகை, விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகளிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட ஆய்வில் 20 கிமீ வேகத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் ஓட்டி விழுந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வாகனஓட்டியின் பின்னால் உட்கார்ந்து செல்வோரும் அவசியம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். விபத்து ஏற்படும் காலத்தில் வாகனஓட்டி சுதாரித்துக்கொள்வார். ஆனால் பின்னால் உட்கார்ந்து செல்வோருக்கு, தாமதமாகத்தான் நடக்கப்போகும் விபத்து குறித்து தெரியவரும் என்பதால் அதிக பாதிப்பு ஏற்படும்.

சீட்பெல்ட் வாகனஓட்டுவோர் மட்டும் அல்லாது பின்னால் உட்கார்ந்து செல்வோரும் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிய வேண்டும் என சத்தியம் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அனைத்து இருசக்கர வாகன விற்பனை கடைகளிலும் ஹெல்மெட் இலவசமாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு வழங்கும்போது ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து 20 நிமிட விழிப்புணர்வு வீடியோ காண்பிக்கப்படுகிறது. 80 கிமீ மேல் வணிக ரீதியிலான வாகனங்கள் செல்லக்கூடாது என்பதற்காக வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை தற்போது செயல்படுத்தியுள்ளோம். முன்னதாக தரம் இல்லாத கருவி பொருத்தப்பட்டு வந்தது.

தற்போது தரமான கருவி பொருத்தப்பட்டிருந்தால் மட்டுமே வாகனத்தை புதுப்பிக்க முடியும் என்ற நிலை கொண்டுவரப்பட்டுள்ளது. சாலைகளின் நடுவில் உள்ள தடுப்புகளின் உயரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஏராளமான நடவடிக்கைகள் வாகனவிபத்தை குறைப்பதற்காக எடுக்கப்பட்டு வருகிறது. அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட ஆய்வில் 20 கிமீ வேகத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் ஓட்டி விழுந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படு வதற்கான வாய்ப்புள்ளது. ஆனால், இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை.

Tags : Transport Commissioner ,Tamil Nadu ,Tenkasi Jawahar , Helmets, 20km speed and danger, ... Tenkasi Jawahar
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...