சென்னை: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக இலக்கிய அணி சார்பில் நடைபெற உள்ள சிறப்பு பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக இலக்கிய அணி சார்பில் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை (3ம் தேதி) சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சொல்வோம்-வெல்வோம்” என்ற சிறப்பு பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கு கலை இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி தலைமை வகிக்கிறார்.
இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் இலக்கிய அணிச் செயலாளர் வளர்மதி நேரில் சந்தித்து, ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இலக்கிய அணியின் சார்பில் நடைபெறவுள்ள சொல்வோம்-வெல்வோம்” என்ற சிறப்பு பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கி நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக இலக்கிய அணி இணைச் செயலாளரும், சென்னை மாநகராட்சி மாமன்ற முன்னாள் வார்டு உறுப்பினருமான டி.சிவராஜ் உடனிருந்தார்.