பெங்களூரு: கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகள் ரக்ஷிதாவின் திருமணத்தை ரூ.500 கோடி செலவில் விமரிசையாக நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாஜவில் இருந்து விலகியிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி தனது மகளான பிரம்மனியின் திருமணத்தை 2016ம் ஆண்டு ரூ.550 கோடி செலவில் விமரிசையாக நடத்தினார். இந்த திருமணம் கர்நாடகா மட்டும் இன்றி நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் நடத்தப்பட்டது. இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி வெளிநாட்டினரும் இதில் கலந்துகொண்டனர்.
இதேபோல தற்போது பாஜ.வைச் சேர்ந்த அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகள் ரக்ஷிதாவின் திருமணத்தை ரூ.500 கோடி செலவில் தொடர்ச்சியாக 9 நாட்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் செந்தூரம்,குங்குமம், சந்தனம், அரிசி போன்றவை அடங்கிய திருமண அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. தனது மகளின் திருமணத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட டெல்லியை சேர்ந்த முன்னணி தலைவர்களுடன், கர்நாடகாவை சேர்ந்த அரசியல் முன்னணி தலைவர்களும் அழைக்கப்பட உள்ளனர். பெங்களூரு பேலஸ் மைதானத்தில் 40 ஏக்கர் நிலம் திருமணத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது. இது தவிர 27 ஏக்கர் நிலம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகவும் மற்றும் 15 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தவும் பயன்படுத்தப்பட உள்ளது. திருமண மேடை மற்றும் நிகழ்ச்சிக்கான வடிவமைப்பில் 300 கலைஞர்கள் கடந்த 3 மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வடிவமைப்பு என்பது ஹம்பியில் உள்்ள விருபாக்ஷி கோயிலை மாதிரியாக கொண்டு 4 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர மேல்கோட்டை கோயிலின் குளம் மாதிரியும் அமைக்கப்பட்ட உள்ளது. இந்த பணியில் 200 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பல்லாரியில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருப்பதால் அங்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தும் பணியில் பாலிவுட் கலை இயக்குனர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் ராமுலு, தனது மகளுக்கு ஒப்பனை செய்ய தீபிகா படுகோனின் மேக்கப் மேனை அழைக்க உள்ளார்.
அத்துடன், முகேஷ் அம்பானியின் மகள் ஈஷாவின் திருமணத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த ஜெயராமன் பிள்ளை மற்றும் திலீப் ஆகியோர் ரக்ஷிதாவின் திருமண நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பொறுப்பேற்றுள்ளனர். மேலும், சினிமா நட்சத்திரங்களுக்கு ஆடைகள் வடிவமைக்கும் சந்தனா சந்தாரியா அமைச்சரின் மகள் ரக்ஷிதாவுக்கு ஆடைகள் வடிவமைக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே பந்தியில் 7 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.