×

நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: இலங்கை அதிபர் கோத்தபய அதிரடி திட்டம்

கொழும்பு: இலங்கையில் முன்கூட்டியே தேர்தல் நடத்த நாடாளுமன்றத்தை இன்றோ அல்லது நாளையோ அதிபர் கோத்தபய ராஜபக்சே கலைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்ற பின், இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார். பின்னர், தனது அண்ணன் மகிந்தா ராஜபக்சேவை இடைக்கால பிரதமராக கோத்தபய நியமித்தார். சிறிசேனாவும், ரணில் விக்ரமசிங்கேவும் அதிபர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்தபோது அதிபரின் அதிகாரங்களை குறைத்து,  நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், 19ஏ திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தம், தற்போதைய அதிபர் கோத்தபயவுக்கு பல வகைகளில் தடையாக உள்ளது. இதில் மீண்டும் திருத்தம் கொண்டு வர அவர்  விரும்புகிறார். மேலும், 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு ஆதரவு தனது கட்சிக்கு இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது. ஆனால், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்காக, நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்றோ அல்லது நாளையோ உத்தரவிடலாம் என இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அடுத்த தேர்தல் முடியும் வரை மகிந்தா ராஜபக்சே பொறுப்பு பிரதமராக இருப்பார். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் என இலங்கை தேர்தல் ஆணைய தலைவர் மகிந்தா தேசபிரியா கூறியுள்ளார்.


Tags : President ,Parliament , Election ,advance ,Parliament,President, Gotabhaya ,Plan
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...