×

சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் முதல்வர் நாற்காலியில் மு.க.ஸ்டாலின் அமர்வார்: வேலைவாய்ப்பு முகாமில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று, முதல்வர் நாற்காலியில் மு.க.ஸ்டாலின் அமர்வார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாள் விழாவாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் சைதாப்பேட்டை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.கே.நகர் தனசேகரன், மு.மகேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடுகிறோம். என்னை பொறுத்தவரை அவரது பிறந்தநாளை முன்பு போலவே இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும். கட்சிக்காகவும், மக்களுக்காகவும் என்றென்றும் உழைக்கக்கூடிய இளைஞராக தான் நான் அவரை பார்க்கிறேன். சமீபத்தில் திமுக எம்எல்ஏக்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அதேபோல உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலம் தேறி மீண்டும் நம்மை வழிநடத்த வருவார் என்றும் நம்புகிறேன்.

ஆளும் கட்சியின் வேலையை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்கான அரசு என்றுமே திமுக தான். அண்மையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் திமுக மகத்தான வெற்றி பெற்றது. தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் 90 சதவீதம் வாக்குகள் பெற்று திமுக வெற்றி பெற்றிருக்கும். உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்பது வெறும் இண்டவர்வெல்(இடைவெளி) தான். இன்னும் 12 மாதத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் தான் கிளைமாக்ஸ். சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும். முதல்வர் நாற்காலியில் மு.க.ஸ்டாலின் உட்காருவார். மக்கள் விரும்பும் அரசு அமைவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : CM Chair ,MK Stalin ,victory ,DMK ,Amarwar ,Udayanidhi Stalin , CM Chair, MK Stalin, Amarwar, Udayanidhi Stalin, Speech
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...