×

ஆப்கானிஸ்தான் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம்: அதிபர் அஷ்ரப் கானி பேட்டி

காபூல்: ஆப்கானிஸ்தான் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 5 ஆயிரம் தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என அதிபர் அஷ்ரப் கானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்திய அல்-கய்தா தலைவர் ஒசாமா பின்லேடனையும், அவர்களுக்கு ஆதரவளித்த தலிபான்களையும் ஒடுக்க அமெரிக்கப்படை ஆப்கானிஸ்தானில் கடந்த 2001ல் இறங்கியது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தலிபான்களை, ஆப்கன் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வைக்கும் முயற்சிகளை சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா மேற்கொண்டது.

ஆனால், அவ்வப்போது தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தி இந்த பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்தினர். இந்நிலையில் தலிபான்கள், அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகளுக்கு இடையே ஒரு வாரம் காலம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல்கள் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடான கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்கா மற்றும் தலிபான் அமைப்பினர் இடையே அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 20 ஆண்டுகாலப் போர் முடிவுக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் இந்த சமரச ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 5 ஆயிரம் தலிபான் கைதிகளை விடுதலை செய்யும் பொறுப்பை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி இன்று தெரிவித்துள்ளார். தலைநகர் காபுலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அஷ்ரப் கானி: தலிபான்களை விடுதலை செய்வது குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை.

ஒப்பந்தத்துக்கு பிறகு, ஆப்கானிஸ்தான் அரசும், தலிபான்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான வாக்குறுதி அமெரிக்காவால் அளிக்கப்படக் கூடியதல்ல. இது தொடர்பான எனது அரசுத்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்குள் கைதிகளை விடுதலை செய்ய நான் தயாராக இல்லை. தலிபான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா தரப்பில் இருந்து எங்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையின் ஒருபகுதியாக வேண்டுமானால் இந்த கோரிக்கை இருக்கலாம். ஆனால், இதை முன்நிபந்தனையாக எங்களிடம் வலியுறுத்தக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.

Tags : Ashraf Ghani ,insurgents ,Taliban ,jails ,Afghanistan , Afghan prison, Taliban terrorist, President Ashraf Ghani
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை