×

ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை பெற்றால் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு முன்னுரிமை பட்டியலில் இடம் இல்லை: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு

நாகர்கோவில்: ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அந்த ஆசிரியர்களை 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது என்று தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் தொடக்க கல்வி, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு பள்ளி ஆசிரியர்கள் 1.1.2020 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி தமிழக தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுதொடர்பான உத்தரவில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வட்டார கல்வி அலுவலரால் தயாரிக்கப்பட்டு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் இரண்டு ஒன்றியங்களுக்கு ஒரு வட்டார கல்வி அலுவலர், ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கல்வி மாவட்ட தலைமை இடத்தில் முகாம் அமைத்து சரிபார்த்து மாவட்ட கல்வி அலுவலரால் ஒப்பளிக்க வேண்டும்.

அதனை வட்டார கல்வி அலுவலர் அறிவிப்பு பலகையில் வெளியிட்டு அனைத்து ஆசிரியர்களிடமும் ஒப்புகை பெற வேண்டும். தமிழ்நாடு குடிமுறைப்பணி ஒழுங்குமுறையும் மேல்முறையீடும் விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தால் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது.  ஒழுங்கு நடவடிக்கையில் கண்டனம் தண்டனை தவிர்த்து பிற தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்கக் கூடாது. அனைத்து வகை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யும்போது பதவி உயர்வுக்கு தேவையான கல்வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி ஆகியவை உரிய காலக்கெடுவிற்குள் பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்துகொண்டு பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Directors ,Teachers , Disciplinary action, teachers, 5-year priority, Director of Elementary Education
× RELATED மலையாள டைரக்டர் ஜோஷியின் வீட்டில் ரூ.1 கோடி தங்க, வைர நகைகள் கொள்ளை