சென்னை: ஊத்துக்கோட்டை போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் ஆந்திரா-தமிழக எல்லையில் போக்குவரத்து சோதனைச்சாவடி (ஆர்டிஓ செக்போஸ்ட்) உள்ளது. இங்கு ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கும் செல்லும் வாகனங்களுக்கு ‘பர்மிட்’ வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாக திருவள்ளூர் லஞ்சஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பிகள் சிவபாத சேகரன், குமாரவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ், சுமத்ரா, அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தங்கவேல் ஆகியோர் நேற்று அதிகாலை 3 மணி முதல் போக்குவரத்துத்துறை சோதனைச் சாவடியில் விடிய, விடிய தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத பணம் 2 லட்சத்து 38 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் போக்குவரத்து சோதனை சாவடி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிர விசாரணைக்கு பிறகு சோதனைச்சாவடி அதிகாரிகள் கைது செய்யப்படுவார்களா என்பது தெரியவரும். இதனால் ஊத்துக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.