×

போதையில் மகளை டார்ச்சர் செய்த மருமகனை கூலிப்படை ஏவி கொலை செய்த மாமனார்: வருசநாடு அருகே பரபரப்பு

வருசநாடு: வருசநாடு அருகே மகளுக்கு தொடர்ந்து போதையில் தொந்தரவு கொடுத்து வந்த மருமகனை, மாமனாரே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம், வருசநாடு அருகே கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன்(45). மனைவி சித்ரா (38). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். செல்லப்பாண்டியனுக்கு மது மற்றும் சீட்டு விளையாடும் பழக்கம் இருந்துள்ளது.  இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் கூலித்தொழிலாளியாக இருந்த செல்லபாண்டியன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கடமலைக்குண்டு கிராமத்திற்கு வந்தார். அங்கு குழந்தைகளை பார்த்து விட்டு மீண்டும் கேரளாவிற்கு செல்வதாக கூறி  சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
இதுதொடர்பாக சித்ராவிடம், செல்லபாண்டியனின் தம்பி ராமராஜ் கேட்டுள்ளார். அப்போது சித்ரா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ராமராஜ், கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் வழக்கு பதிந்து செல்லப்பாண்டியனை தேடி வந்தனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில்  ரோந்து சென்ற போலீசார் வேறொரு வழக்கில் சிக்கிய தூத்துக்குடியை சேர்ந்த கிஷோர்(26), நாகர்கோவிலைச் சேர்ந்த அன்பு (35), செந்தில் (40) ஆகியோரிடம் விசாரணை  நடத்தினர். அவர்கள் செல்லப்பாண்டியனை எரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். கடமலைக்குண்டு போலீசார் நடத்திய விசாரணையில், போதைக்கு அடிமையான மருமகன் செல்லப்பாண்டியனை, மாமனார் தங்கம்மாள்புரம் மகாராஜன் (66) கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து மகாராஜனை  போலீசார் கைது செய்தனர்.



Tags : Mother-in-law ,Parabaram ,Parasuram ,Varusanad , Torture ,daughter ,intoxicated,mercenary avi, Varusanad
× RELATED பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் விஜய் தேவரகொண்டா படம்