×

திருமணத்துக்கு மறுத்ததால் கொடூரம் கழுத்தை இறுக்கி வாயில் விஷம் ஊற்றி கல்லூரி மாணவியை கொன்ற காதலன்

கோவை: கோவை அருகே திருமணத்துக்கு மறுத்ததால் கல்லூரி மாணவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி, வாயில் விஷத்தை ஊற்றி கொன்ற காதலன் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கோவை அருகே கோவில்பாளையம் கீரணத்தம் கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் நந்தினி (21). இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் மூன்றாமாண்டு படித்து வந்தார். இவருக்கும் கணபதி சங்கனூர் பகுதியை சேர்ந்த தினேஷ் (21) என்பவருக்கும் பள்ளியில் படிக்கும்போதே பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் இருவரும்  காதலித்து வந்துள்ளனர். இது இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது.  நந்தினியின் பெற்றோர் கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்தனர். ஆனால் தினேஷ் அதனை ஏற்க மறுத்து உடனே நந்தினியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அவரது நடத்தை பிடிக்காததால் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து அவருடன் நந்தினி பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் நேற்று முன்தினம் மாலை நந்தினியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது முருகன் இருந்ததால் வீட்டுக்கு வெளியே மறைவான இடத்தில் காத்திருந்த தினேஷ், முருகன் வெளியே சென்றதும் உள்ளே புகுந்தார்.

அங்கிருந்த நந்தினியிடம் ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த தினேஷ் வீட்டில் இருந்த டேபிள், சேர் ஆகியவற்றை உடைத்துள்ளார். பின்னர் அங்கிருந்த கயிற்றால் நந்தினியின் கழுத்தை இறுக்கி, சாணிபவுடரை (விஷம்) கரைத்து அவரது வாயில் ஊற்றினார். இதில் நந்தினி மயங்கி சரிந்தார். பின்னர் தினேஷ் தனது பாட்டி வீட்டுக்கு  சென்று தானும் சாணி பவுடரை கரைத்து குடித்தார். அங்கிருந்தவர்கள் தினேசை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே பெற்றோர் வீட்டுக்கு வந்து மயங்கி கிடந்த நந்தினியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் தினேஷை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

Tags : Lover ,college student , lover , stabbed his neck, poisoned his mouth, killed , college student
× RELATED ஓடிடியில் வெளியாகிறது ‘லவ்வர்‘!