வேலூர்: வேலூரில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற தனி துணை ஆட்சியரை அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரது இல்லத்தில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.50 லட்சத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்திரை தாள், தனி துணை ஆட்சியராக பணியாற்றும் தினகரன் நிலத்தை பதிவு செய்த ரஞ்சித்குமார் என்பவரிடம் ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் அறிவுரைகளின் படி நேற்றிரவு வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து தினகரனிடம் ரூ.50000 பணத்தை ரஞ்சித்குமார் வழங்கினார்.
இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்ட தினகரனை சத்துவாச்சாரி அருகே லஞ்ச ஒழிப்பு துறையினர் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். காரில் இருந்து ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தினகரன் மற்றும் கார் ஓட்டுநர் ரமேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்திரைத்தாள் அலுவலக அறை மற்றும் தினகரன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர். அப்போது தினகரனின் இல்லத்தில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.50 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். இதே போல் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஊத்துக்கோட்டை வாகன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 38 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.