சென்னை: வடசென்னையில் உள்ள அனல் மின்நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் 250 பேர் வேறு இடத்திற்கு போகாமல் சும்மா சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார். புதுப்பிக்கதக்க எரிசக்தி மேலாண்மை மையம் திறப்பு விழா நேற்று சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி, மின்வாரிய தலைவர் விக்ரம்கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் 7 மாநிலத்தில் நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளதையடுத்து தமிழகத்திலும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்றால் போல் அனல் மின்நிலையத்தில் உற்பத்தியை ஏற்றுவதற்கும், குறைப்பதற்கும் வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. நேற்று மத்திய அமைச்சர் துவக்கி வைத்திருக்கிறார் அதை தமிழக மின்சார வாரியம் செயல்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின் இப்போதைய தேவை 15,500 ஆயிரம் மெகாவாட் ஏப்ரல் மாதத்தில் 17 ஆயிரம் மெகாவாட் வரும் என்று எதிர்பார்க்கிறோம். எந்த சூழ்நிலையிலும் தமிழகத்திற்கு தேவையான மின்சார உற்பத்தி இருக்கின்ற காரணத்தினால் 17 ஆயிரம் இல்லை 17,500 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் தேவைப்பட்டாலும் மின்சாரம் இருப்பதால் மின்வெட்டு வராது.
2022ம் ஆண்டில் அனல் மின்நிலையம் மூடப்பட வேண்டிய பட்டியலில் தூத்துக்குடி, வடசென்னை, மேட்டூர் அனல் மின்நிலையம் உள்ளது என்று மத்திய மின்வாரியத்துறை அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதற்கு கண்டிசன் சொல்லியிருக்கிறார்கள் அதற்கு சில உபகரணங்கள் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். வடசென்னையில் ஒரு அனல் மின்நிலையம் மூடப்பட்டுள்ளது. ஆனால் அதில் உள்ள 250 பேர் வேறு இடத்திற்கு போட்டால் போகாமல் சும்மா சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கின்றனர். வேறு வழியில்லாமல் நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறுகின்றனர். ஒழுங்காக வேலை செய்கிறவர்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்கள் இந்த யூனிட்டில் தான் இருப்போம் என்று கூறுகின்றனர். அவர்களுக்கு சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.