×

தூத்துக்குடியில் பலாத்காரம் செய்தவரிடம் இருந்து வீடியோ காட்சிகளை மீட்க வேண்டும்: கர்ப்பிணியான கல்லூரி மாணவி போலீசில் புகார்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து வீடியோ காட்சிகளை மீட்க வேண்டும் என கல்லூரி மாணவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த சிவபெருமாள் மகள் லெட்சுமி. தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவரது எதிர் வீட்டை சேர்ந்த உறவினர் மகன் வினீத் (23). தனியார் உலர்பூ நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லெட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளார். இதில் லெட்சுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் கடந்த 8ம் தேதி வினீத் மீது பாலியல் பலாத்காரம் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

மேலும் வினீத் செல்போனில் பதிவு செய்து மிரட்டல் விடுத்து வரும் வீடியோ கிளிப்பிங்குகளை அனைத்து மகளிர் போலீசார் மீட்கவில்லை என்ற குற்றச்சாட்டு லெட்சுமி தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்ததுடன் சரி, மேல்நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை என்று லெட்சுமி தனது பெற்றோருடன் கடந்த 15ம் தேதி எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன் பின்னரும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று லெட்சுமி தனது பெற்றோருடன் எஸ்பி அலுலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் மீண்டும் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து லெட்சுமி கூறுகையில், கடந்த 8ம் தேதி வழக்குப்பதிவு செய்தது முதல் வீனீத்தை பிடிக்க போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும் அவர் என்னை பலாத்காரம் செய்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனை நான் புகாரில் குறிப்பிட்டிருந்தேன். இது எப்ஐஆரிலும் பதிவாகியுள்ளது. அவரை கைது செய்து 3 நாட்களில் அந்த வீடியோக்களை மீட்டு நடவடிக்கை எடுப்பதாக உயரதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரையில் நடவடிக்கை இல்லை.

அவரது தரப்பினர் மிரட்டலுக்கு பயந்து தற்போது நான் பெற்றோருடன் ஸ்ரீவைகுண்டத்தில் உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறேன். போலீசார் வினீத்தை கைது செய்து அவரிடம் இருந்து, வீடியோ கிளிப்பிங்குகளை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : rape victim ,Thoothukudi ,college student , Report
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...