வானூர்: வானூர் தாலுகா திருவக்கரையில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் வக்கிரகாளியம்மன் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மதியம் சாமி தரிசனம் செய்தார். அவரை விழுப்புரம் பயிற்சி ஆட்சியர் ஸ்ரேயா பீ சிங், கோட்டாட்சியர் ராஜேந்திரன், அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், உதவி ஆணையர் தேவி, எஸ்பி ஜெயக்குமார், தாசில்தார் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தலைமை அர்ச்சகர் சேகர் தலைமையில் ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு சாமிதரிசனம் செய்த அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது இந்த கோயிலுக்கு அவ்வப்போது வந்து செல்வது உண்டு. ஆனால் ஆளுநராக பதவியேற்றபின் முதன்முதலாக நேற்று அவர் இக்கோயிலுக்குவந்து சாமிதரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி: மயிலம் முருகன் கோயிலுக்கு வந்த தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில், மயிலம் திருமட நிர்வாகிகள் விஸ்வநாதன், ராஜீவ்குமார், ராஜேந்திரன் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், பாலசித்தர் மற்றும் வள்ளி-தெய்வானை-தேவசேனா சுப்பிரமணியர் சாமியை கவர்னர் தமிழிசை தரிசனம் செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, சப்-கலெக்டர் ஸ்ரேயாபி சிங், எஸ்பி ஜெயக்குமார், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, தாசில்தார் சந்திரசேகர், துணை கண்காணிப்பாளர் ராஜன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.