×

குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காத்தவராயன்(60) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று எம்.எல்.ஏ. எஸ்.காத்தவராயன் உயிர் பிரிந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி சிறைசென்ற, காத்தவராயன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட திமுக துணை செயலாளராகவும் இருந்துள்ளார். 2011-ம் ஆண்டு பேரணாம்பட்டு நகர்மன்ற தலைவராக இருந்தார். திருமணம் செய்து கொள்ளாத காத்தவராயன் தனது சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இவருக்கு இதயநோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் போதிய பலன் அளிக்காததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்து கடந்த மாதம் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்தார். இதனைத் தொடர்ந்து காத்தவராயன் இல்லத்திற்கு சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்து வந்தார். இந்நிலையில் மீண்டும் உடல்நிலை மோசமானதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது.

2 நாட்களில் 2 எம்.எல்.ஏ.க்கள் உயிரிழப்பு

நேற்று திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு கட்சியினர் திரளாக சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அடுத்த நாளே மற்றொரு எம்.எல்.ஏ காலமாகி இருப்பது அக்கட்சியினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தமிழக சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் பலம் 98ஆக குறைந்துள்ளது.

எம்.பி.க்கள் கூட்டம் ரத்து

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்க இருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் 2 எம்.எல்.ஏ.க்கள் உயிரிழந்துள்ளதால் திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : S. Kathavarayan ,Gudiyatham DMK ,DMK MLA ,Gudiyatham , DMK MLA, Gudiyatham, S Kathavarayan, passed away
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...