×

பயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகளை ஒழிக்கபாக். செல்கிறது சீன வாத்து படை: தினமும் 200ஐ விழுங்கி கபளீகரம் செய்யும்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பரவி வரும் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க உதவும் வகையில் ஒரு லட்சம் வாத்துகள் கொண்ட படையை அனுப்ப தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு படையெடுத்துள்ளதாக கூறப்படும் வெட்டுக்கிளிகள், கடந்தாண்டு பருத்தி செடிகளுக்கு நாசம் விளைவித்தன. தற்போது, தெற்கு மாகாணமான சிந்து உள்பட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள  கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகி வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பு பயிர்களை நாசம் செய்துள்ளன.  இவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, சீன விவசாயம், கிராமப்புற விவகார அமைச்சகம், பாகிஸ்தானுக்கு ஏற்கனவே நிபுணர்கள் குழுவை அனுப்பியுள்ளது.

இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பில் இருந்து பாகிஸ்தான் தப்புவதற்கு உதவும் வகையில் ஒரு லட்சம் வாத்துகளை அனுப்ப சீனா தயாராக உள்ளது. கிழக்கு சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து அனுப்பப்படும் இந்த வாத்து ராணுவம், வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவதில் முன்னிலை வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து ஜெஜியாங் வேளாண் அறிவியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர் லு லிஷி கூறுகையில், ``கோழிகளுடன் ஒப்பிடுகையில், வாத்துகள் கூட்டமாக வாழக் கூடியவை. கோழிகளை விட நிர்வகிப்பதற்கு எளிமையானவை. கோழியால் நாளொன்றுக்கு 70 வெட்டுக்கிளிகள் வரை மட்டுமே உண்ண முடியும்.

அதே நேரம், வாத்துகளால் 200 வெட்டுக்கிளிகள் வரை சாப்பிட முடியும். குளிரை தாங்கும் சக்தி, நீண்டநாள் வாழ்க்கை, எந்த சூழலிலும் வாழக் கூடியவை ஆகியவற்றின் அடிப்படையில் கோழிகளை விட வாத்துகள் சிறந்தவை. இதனால், கோழிகளை விட வாத்துகள் 3 மடங்கு அதிக திறன் படைத்தவை. அவை தவளைகள், பறவைகளை விட ஒழுக்கமானவை,’’ என்றார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் நடந்த இது போன்ற வெட்டுக்கிளி தாக்குதலின் போது, ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து வாத்து படை அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Chinese , Crops, locusts, Chinese ducks
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...