கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி அங்கு டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்த நிலையில் கடைசி டி20 போட்டி கேப்டவுனில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 57, கேப்டன் ஆரோன் பிஞ்ச் 55 ரன் எடுத்தனர். அடுத்து வந்த மாத்யூ வாட் 10, மிட்செல் மார்ஷ் 19 ரன்னில் வெளியேறினர். ஆனால் ஸ்டீவன் ஸ்மித் 15 பந்துகளில் 30*ரன் விளாச ஆஸ்திரேலியா 20ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 193ரன் எடுத்தது.
தென் ஆப்ரிக்காவின் ரபாடா, ஆன்ரிச், என்ஜிடி, பிரேடோரியஸ், ஷாம்சி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
தொடர்ந்து 194ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் டீ காக், டூ பிளிசிஸ் ஆகியோரை தலா 5 ரன்னில் வெளியேற்றினார் மிட்செல் ஸ்டார்க்.
கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்த வாண்டெர் டூஸன் 24, ஹெயின்ரிச் கிளாசன் 22ரன்னில் ஆட்டமிழந்ததும் வெற்றி ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. அதற்கு ஏற்ப டேவிட் மில்லர் 15, வான் பில்ஜோன் 1, டிவைன் பிரெடோரியஸ் 11, காகிசோ ரபாடா 5, அன்ரிச் நோர்ட்ஜே 2, லுங்கி என்ஜிடி 0ரன் என அடுத்தடுத்து வெளியேறினர். மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 3, ஆடம் ஸம்பா 2, பேட் கம்மின்ஸ், மிட்சல் மார்ஷ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தெ.ஆப்ரிக்கா 15.3ஓவரில் எல்லா விக்கெட்களும் இழந்து 96ரன் மட்டுமே எடுத்தது. எனவே ஆஸ்திரேலியா 97 ரன்னில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகன், ஆரோன் பிஞ்ச் தொடர் நாயகன் விருது பெற்றனர். தெ.ஆப்ரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா தொடர்ந்து 3வது முறையாக டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.