மதுரை: நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரி, மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நடிகர் தனுஷ் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நடிகர் தனுஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மேலூர் நீதிமன்றத்திலுள்ள வழக்கை ரத்து செய்தது.
இந்த வழக்கில் நடிகர் தனுஷ் தனது கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி, கதிரேசன் மதுரை ஜேஎம் 6ம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மாஜிஸ்திரேட் முத்துராமன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட், மனுதாரர் மற்றும் எதிர் தரப்பில் பல்வேறு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் உண்மைத்தன்மையை சரி பார்க்க வேண்டியுள்ளது. எனவே, நடிகர் தனுஷின் பிறப்புச் சான்றிதழை சென்னை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் மனு மீதான விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்திற்கு அவர் தள்ளி வைத்தார்.