×

வால்பாறையில் ரேஷன் கடை, டீக்கடைகளை உடைத்து யானைகள் அட்டகாசம்

வால்பாறை: வால்பாறையை அடுத்து உள்ள தாய்முடி மத்திய பிரிவு எஸ்டேட்டில் நேற்று அதிகாலை புகுந்த 3 காட்டு யானைகள் ரேஷன் கடை மற்றும் டீக்கடையை உடைத்து சேதப்படுத்தின. கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துஉள்ளது தாய்முடி எஸ்டேட். இங்குள்ள தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியின் மையத்தில் ரேஷன் கடை அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அப்பகுதிக்கு வரும் காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து அங்குள்ள அரிசி, பருப்பு, சர்க்கரையை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன. கடந்த 4 மாதங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட முறை காட்டு யானைகள் இக்கடையை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த ரேஷன் கடைக்கு வந்த யானைகள் கடையின் சுற்று சுவரை இடித்து சேதப்படுத்தி உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தின. மேலும் அருகே இருந்த டீக்கடையை உடைத்தன. நேற்று காலை இப்பகுதி மக்கள் வந்து பார்த்த பிறகே  யானைகள் வந்து சென்றது தெரியவந்தது. குடியிருப்புகள்   நிறைந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையை அடிக்கடி யானைகள் சேதப்படுத்தி வருவதால் இப்பகுதி மக்கள்   உடைமைகளுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே ரேஷன் கடையை பாதுகாப்பான பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என எஸ்டேட் மக்கள் மற்றும் வன   ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Valparai ,toy shops , Walnut shop, ration shop, teak shop, elephants
× RELATED திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய...