விருதுநகர்: விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவித்த பெண், கணவர், பெற்றோர் அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விட்டதாக புகார் எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள பனையூரை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆயிராம். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேஸ்வரிக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து விஸ்வகாமாட்சி (2 1/2) என்ற பெண் குழந்தை உள்ளார். இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக பிப்.23ந்தேதி அதிகாலை விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு காலை 6.45 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிரசவத்தின் போது மயக்க ஊசி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பதற்கு ஆயிராமின் தாயிடம் கைரேகை பெற்றுள்ளனர். குழந்தை பிறந்த நிலையில் நேற்று முன்தினம் செவிலியர் மூலம் தனக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் சேர்த்து செய்யப்பட்ட தகவலை வெங்டேஸ்வரி அறிந்துள்ளார். உடன் மருத்துவர்களிடம் ஆயிராம் மற்றும் வெங்கடேஸ்வரி அனுமதியின்றி எப்படி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தீர்கள் என கேட்டபோது உரிய பதிலை அளிக்கவில்லை. வெங்கடேஸ்வரி கூறுகையில், முதல் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுத்தபோது கணவரிடம் கையெழுத்து பெற்று எடுத்தனர்.
அறுவை சிகிச்சை செய்யும்போது வெறும் பாரத்தை கொண்டு வந்து என்னிடம் கையெழுத்து வாங்கினர். எதுவும் எழுதாமல் வாங்கிய படிவத்தில் அவர்களாக எழுதிக் கொண்டனர். கணவர் ஆயிராம் கூறுகையில், மனைவியை பிரசவத்திற்கு சேர்த்த நிமிடம் முதல் குழந்தையை ஆப்ரேசன் செய்து எடுத்த பின்பும், இன்றுவரை மருத்துவமனை வாசலில் நிற்கிறேன். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக மனைவி மற்றும் என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்றார். வெங்கடேஸ்வரி தந்தை மகாலிங்கம் கூறும்போது, மருத்துவமனை பணியாளர்கள் சொல்லி தான் தெரியவந்தது.
டாக்டர்களிடம் கேட்டபோது தினசரி 20 கேஸ் வருகிறது. 21வது கேஸாக நாங்களாக செய்றது தான். ஒவ்வொருவரிடம் ஒவ்வென்னா கேட்டு செய்ய முடியாது என அராஜகமாக கூறுகின்றனர்.