×

சென்னை விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்: மத்திய அமைச்சருக்கு தயாநிதிமாறன் எம்பி கடிதம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சோதனைகளின் போது பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால், கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்று, விமானத்துறை அமைச்சருக்கு திமுக எம்பி தயாநிதிமாறன் கடிதம் எழுதியுள்ளார். மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கக் கூடிய பயணிகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச டெர்மினல்களில் நடத்தப்படும் பாதுகாப்பு சோதனைகளின் போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். தினமும் கிட்டத்தட்ட 40,000 பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து பயணிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும்படியான அவலநிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் பலர் சமூக ஊடகங்களின் வாயிலாக புகார் அளித்துள்ளனர்.

விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டால், ‘இந்த முனையத்தின் திறன் அவ்வளவுதான். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் முடிவடையும் வரை பயணிகளுக்கு எவ்வித உதவியும் செய்ய முடியாது’ என்று தெரிவிக்கின்றனர். அதனால், தயவுசெய்து இந்த விஷயத்தை ஆராய்ந்து பயணிகளின் வசதிக்காக நிலுவையில் உள்ள பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இரு முனையங்களிலும் பயணிகளின் நெரிசலைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : passengers ,airport ,Chennai ,Union minister ,Dayanidhimaran MP ,Dayanidhimaran , Letter from Chennai Airport, Union Minister, Dayanidhimaran MP
× RELATED சென்னை – மொரிஷியஸ் விமான சேவை தொடக்கம்