சென்னை: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடற்கரையை அனைவருக்கும் ஏற்ற வகையிலாக மாற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா மற்றும் பெசன்ட் கடற்கரையில் சிறப்பு பாதையை அமைக்க மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபாதை அமைக்க மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. மெரினா கடற்கரையில் அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இதை பரிசீலனை செய்த மத்திய ஒழுங்குமுறை ஆணையம் இரண்டு இடங்களில் நடைபாதை அமைக்க அனுமதி அளித்துள்ளது. உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகே இந்த நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலம், காந்தி சிலை அருகே 125 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்த பாதை அமைக்கப்பட உள்ளது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ஆன பாதை மட்டுமே அமைக்க வேண்டும் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி ₹90 லட்சம் செலவில் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு மூன்று சக்கர நாற்காலி மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கடற்கரைக்கு அழைத்து செல்லப்பட்டு கடல்நீரில் விளையாடி மகிழ்ந்தனர். இதற்காக சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் 8.8 லட்சம் மதிப்பில் மணல் பரப்பில் இயக்கும் 4 சிறப்பு சக்கர நாற்காலிகள் மாநகராட்சியால் வாங்கப்பட்டுள்ளது.