×

செல்போன் பறித்து தப்பியபோது பைக் விபத்தில் வாலிபர் காயம்: 3 பேர் கைது

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் வெங்கடேஷ்வரா நகர் 7வது தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (32). கட்டிடத் தொழிலாளி. இவர் நேற்று மாலை துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த 3 இளைஞர்கள் திடீரென சிவலிங்கம் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். அவர்கள், பல்லவன் குடியிருப்பு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு சாலையை கடந்த ஏழுமலை என்பவர் மீது பைக்கை மோதியுள்ளனர்.  இதில் ஏழுமலை மற்றும் பைக்கில் வந்த 3 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே அங்கிருந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய 3 பேரை பிடித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் பெரும்பாக்கம் கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் (23), குமரவேல் (24), சந்தோஷ் (23) என தெரிந்தது. மேலும் இவர்கள் சிவலிங்கத்திடம் வழிப்பறி செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வேறு எந்த வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரணை செய்து வருகின்றனர். இதில் சந்தோஷ் தனியார் கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது.


Tags : bike accident , Cell phone seizure, youth injured, 3 arrested
× RELATED (தி.மலை) மரத்தில் பைக் மோதி விவசாயி பலி