×

பேஷன் டிசைனர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

* பீட்சா டெலிவரி நபர் கைது * 3 பேரிடம் விசாரணை

சென்னை: பெண் பேஷன் டிசைனரை தொடர்பு கொண்டு பாலியலுக்கு அழைத்து தொந்தரவு செய்த பீட்சா டெலிவரி நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை தேனாம்பேட்டை சீத்தம்மாள் காலனி முதல் தெருவை ேசர்ந்தவர் காயத்ரி சாய்நாத். இவர், அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தற்போது பேஷன் டிசைனராக பணியாற்றி வருகிறார். இவர்,  தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், ‘மோகனசுந்தரம் என்பவர் என்னை தொடர்பு கொண்டு என்னுடைய செல் போன் நம்பர், வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாசமாக ஷேர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவரை விசாரித்த போது பரமேஸ்வரன் என்ற நபரின் வாட்ஸ்  அப்பில் ஷேர் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மாலை 6 மணியளவில், சக்திவேல், மகேஷ்குமார், சுந்தரம் சந்திரவேல் ஆகியோர் இரண்டு முறை அழைத்து தொந்தரவு செய்தனர். அவர்களின் கால் பதிவுகள் வாட்ஸ்அப் மெசேஜ்  அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும்’ என்று புகாரில் கூறியிருந்தார்.

அதன்படி தேனாம்பேட்டை அனைத்து  மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 9ம் தேதி மாலை பேஷன் டிசைனர் காயத்ரி சாய்நாத் ஆன்லைனில் பிரபல தனியார் பீட்சா நிறுவனத்தில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். அதன்படி பீட்சாவை டெலிவரி செய்யும் நபர் பரமேஸ்வரன் கொண்டு வந்து காயத்ரி  சாய்நாத்திடம் கொடுத்துள்ளார். பீட்சா கொண்டு வர முகவரி கேட்டு அடிக்கடி அவர் போன் செய்து காயத்ரி சாய்நாத்தை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் எரிச்சலடைந்த காயத்ரி பீட்சா டெலிவரி செய்யும் போது, டெலிவரி நபரை சற்று திட்டியதாக  கூறப்படுகிறது. எனவே, ஆத்திரமடைந்த பரமேஸ்வரன் காயத்ரியை பழிவாங்க வேண்டும் என்ற என்னத்தில் அவரது செல்போன் நம்பரை  ஆபாச வெப்சைட் மற்றும் ஆபாச வாட்ஸ்அப் குழுவில் பரப்பியது தெரியவந்தது.

இதனால் அந்த வெப்சைட் மற்றும் வாட்ஸ் அப் குழுவில் உறுப்பினராக உள்ள சக்திவேல், மகேஷ்குமார், சுந்தரம் சந்திரசேகர்  ஆகியோர் பேஷன் டிசைனர் காயத்ரியை செல்போனில் தொடர்பு கொண்டு பாலியலுக்கு அழைத்ததும்  ஆபாசப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது வாட்ஸ் அப் எண்ணில் பதிவு செய்து தொந்தரவு செய்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் பேஷன் டிசைனர் காயத்ரி நம்பரை ஆபாச வெப்சைட் மற்றும் வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்த பீட்சா டெலிவரி நபர் பரமேஸ்வரனை அதிரடியாக கைது செய்தனர். மேலும், போன் செய்து தொந்தரவு செய்த 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fashion designer woman , fashion designer, woman, Sexual harassment
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை